சவூதி அரேபியாவிலுள்ள இரண்டு புனிதஸ்தலங்களின் சேவகரான அந்நாட்டு மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆலு சூஊதின் விருந்தினர்களாக 2015ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையினை நிறைவேற்றுவதற்கு 20 இலங்கையர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களின் பயணத்திற்கான பயணச்சீட்டுக்களை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயத்தின் பொறுப்பதிகாரி மம்துஹ் முஹம்மது அலி அல்லாப் தலைமையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.
இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அலுவலகத்தின் பணிப்பாளர் முஹம்மது அப்துல்லாஹ் அல்ஹாமிதியின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஹஜ் கடமையினை நிறைவேற்றுவதற்கு தெரிவுசெய்யப்பட்ட 20 இலங்கையர்களுக்குமான பயணச்சீட்டு மற்றும் இஹ்ராம் ஆடை உள்ளிட்ட பல பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் சவூதி மன்னரின் விருந்தினர்களாக ஹஜ் கடமையினை நிறைவேற்றவுள்ளவர்கள் சார்பில் வாமி நிறுவனத்தின் இலங்கை பணிப்பாளர் அஷ்ஷெய்க் நஜ்மான் ஷஹீட் உரையாற்றிய போது, சவூதி அரேபிய தூதுவராலயத்தின் பொறுப்பதிகாரி மம்துஹ் முஹம்மது அலி அல்லாப் மற்றும் தூதுவர் அலுவலகத்தின் பணிப்பாளர் முஹம்மது அப்துல்லாஹ் அல்ஹாமிதி ஆகியோருக்கு நன்றி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
சவூதி மன்னரின் அலுவகத்திலிருந்து அனுப்பப்பட்ட நிபந்தனைகளுக்கமைய நாட்டில் செல்வாக்குமிக்க முதற் தடவையாக ஹஜ் கடமையினை நிறைவேற்றுபவர்களே இந்தக் குழுவில் பெரும்பாலானவர்களாக தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் 16ஆம் திகதி மக்கா நோக்கி பயணமாகவுள்ள இந்தக் குழுவில் தெரிவுசெய்யப்பட்டுள்ள இலங்கையர்களின் விபரம்:
- அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் – அதிபர், புத்தளம் காஸிமியா அரபுக் கல்லூரி
- அஷ்ஷெய்க் எம்.எச். லபீர் – அதிபர், ஹக்கானியா அரபுக் கல்லூரி, தகஸ்கர – கண்டி
- அஷ்ஷெய்க் நஜ்மான் ஷஹீட் – வாமி நிறுவத்தின் இலங்கை பணிப்பாளர்
- டாக்டர் எஸ்.எம். றயீஸுத்தீன் – விரிவுரையாளர், உன்நாட்டு மருத்துவ பீடம் – கொழும்பு பல்கலைக்கழகம்
- டாக்டர் எம்.பாயிக் – வைத்திய அதிகாரி
- அஷ்ஷெய்க் எஸ்.எம்.எம்.மசாஹிர் – பீடாதிபதி, இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடம் – தென் கிழக்கு பல்கலைக்கழகம்
- அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் அசாம் – பிரதம நிறைவேற்று பணிப்பாளர் JMF
- அஷ்ஷெய்க் எம்.எம்.முஹைதீன் – ஆசிரியர் / ஊடகவியலாளர்
- அஷ்ஷெய்க் ஏ.ஆர். நாசார் – திருகோணமலை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் / தென் கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்
- றிப்தி அலி – பிரதம ஆசிரியர், விடியல் இணையத்தளம்
இதற்கு மேலதிகமாக நாட்டின் பல பாகங்களினைச் சேர்ந்த கல்விமான்கள் மற்றும் உலமாக்கள் என 10 பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி : எங்கள் தேசம்
No comments:
Post a Comment